Sunday, October 31, 2010

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்

 

நாங்கள் யார்?
குழந்தைகளா ?
தொழிலாளர்களா?, இல்லை
குழந்தைத் தொழிலாளிகள்

நாங்கள்......

பூவாகாமலே
புதைக்கப்பட்ட
மொட்டுக்கள்

நாங்கள்......

துவக்கத்தையே
தொலைத்த
முடிவுகள்

நாங்கள்......

முகவுரையிலேயே
முடிவுரையாய்
போனவர்கள்

நாங்கள்......

கல் உடைக்கும்
செதுக்கப்படாத
சிற்பங்கள்

நாங்கள்......

சிலந்தி வலையில்
சிறை பிடிக்கபட்ட
இளம் சிங்கங்கள்

நாங்கள்......

ஐம்பதிலும் வளைவோம்
சம்மட்டி அடித்து
ஐந்திலேயே வளைந்துவிட்டோமே

நாங்கள்......

இந்தியாவின் எதிர்கால தூண்கள்
இப்போதைய வேலை
செங்கல் சூளையில்

நாங்கள்......

மத்தாப்பு தொழிற்சாலையில்
புஸ்வாணம் ஆகிபோன
எதிர்கால நட்சத்திரங்கள்

நாங்கள்......

இறக்கைகள் இருப்பதையே
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பறவைக் குஞ்சுகள்

நாங்கள்......

கிழக்கிலேயே
அஸ்தமிக்கும்
சூரியன்கள்

நாங்கள்......

தீப்பெட்டி தொழிற்சாலையில்
கருகிப்போன
தீக்குச்சிகள்

நாங்கள்......

இந்நாட்டு மன்னர்களாம்
மாடு மேய்க்கும்
மாயாண்டியுமா ?

எங்கள்

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்கள் கையிலாம்
பூ விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை

நாங்கள்......

சுண்டல் விற்கும்போது
இளமைப் பருவமே
சுனாமியால் சுருண்டுவிடும்

நாங்கள்......

சாலையில் 'குழந்தைகள் ரைம்ஸ்'
புத்தகம் விற்கும்
பள்ளிசெல்லா குழந்தைகள்

நாங்கள்......

திருவிழாவில் தொலைந்ததுபோல்
திக்கு தெரியாமல்
தொழிற்சாலையில்

நாங்கள்......

குழந்தை என்ற
முகவரி இழந்த
முகங்கள்

நாங்கள்......

கொண்டாட்டங்கள் கேட்கவில்லை
கூடங்கள்
பள்ளிகூடங்கள் தான்

அப்பா......

பள்ளிகூடம் செல்லும்
பாதை மட்டும்
காட்டேன் எனக்கு

அம்மா.....

பட்டரை சுத்தியலைவிட
பாடப்புத்த்கம்
கனமானதா ?

அண்ணா...

சட்டைக்கு காஜா
போட்டது போதும்
பள்ளிச் சீறுடை வங்கித்தா எனக்கு

அக்கா....

சிலேட்டும் பலப்பமும்
வாங்கி கொடேன்
உளிகள் சுமந்து கை வலிக்கிறது

எங்களுக்கு வேண்டாம்

மே தினக் கொண்டாட்டம்
எங்களை குழந்தைகளாகவே
இருக்க விடுங்கள்

கைமட்டும் கொடுங்கள்

எங்கள் கால்கள்
வாழ்கையின் அடுத்த
அடி எடுத்து வைக்க !

No comments:

Post a Comment