Tuesday, October 12, 2010

மரணம்



இமைப்போல்
இறுக்கிக்காத்த;
இறக்கையில் காத்த
அன்னையும் ஒரு நாள்!

குருதியை வியர்வையாக்கி
கடமையைப் போர்வையாக்கி
விழுதாய் இருந்து
கழுகாய் காவல் காத்த
தந்தையும் ஒரு நாள்!

அழுதால் அழுது
சிரித்தால் சிரித்து
கண்ணாடியாய் நம்
முன்னாடி தோன்றும்
மனைவியும் ஒரு நாள்!

தோல்கள் சுருங்கிக்
நரம்புகள் தோய்ந்து
நாமும் சாய்வோம்
ஒரு நாள்!

உச்சரிக்கும் போதே
உச்சந்தலைக் சிலிர்க்கும்;
எச்சரித்தாலும் நிச்சயம்
அது நடக்கும்!

தொண்டைக்குழியில்
சண்டைப்போடும்
சுவாசம்;
ஈரம் காத்த விழிகள்
தூரல் போடும்;
காதோடு சாரல் தூவும்!

சுற்றி நின்று
சொந்தங்கள்
சோகமயம் காட்டும்;
துடிக்கும் நம் உயிரோ
வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
பறக்கக் காற்றுக் கொண்டிருக்கும்!

முதல் அழுகை ஆனந்தமானது
நாம் பிறக்கும்போது;
இறுதி அழுகை அழுத்தமானது
நாம் இறக்கும்போது!
 
பிரியும் போது
நிரந்திரமில்லா உலகத்தில்
நிலையாக ஏதேனும்
விட்டுச் செல்லும் நாம்!

நிலையான உலகத்திற்கு
குலையாத நன்மைகள்
குறையாத நன்மைகள்;
சுமந்துச் செல்வோம்;
சுவர்க்கம் செல்வோம்!

No comments:

Post a Comment