Tuesday, December 6, 2011

இளமைக்கால நினைவுகள்















பிறந்திட்ட நாள் முதல்
பெற்றோரின் அரவணைப்பில்
இருந்திட்ட நாள் தவிர்த்து
பறந்திட்ட நாட்கள் முதல்

மறந்திட்ட விஷயம் நீங்கி
மனதினில் பசுமையாய்
இருந்தினிக்கும் நினைவுகள்
இறுதிவரை பல உண்டு.

வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.

காலிப் பயல்களோடு
கண்டபடி சுற்றியதால்
கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு.

நுனாப்பழம் புசித்துவிட்டு
நாவெல்லாம் கருப்பாக்கி
வீணாய் பயந்ததுண்டு
வெளியாகும் மறு நாளில்.

ஓர் கிணறு விடாமல்
ஓயாமல் நண்பரொடு
இருவிழியும் சிவந்திட
இருளும்வரை நீராடி

நேரமிக வானதினால்
நெஞ்சமது பட படக்க
விரைந்து வீடுநோக்கி 
விசனமாய் செல்கையில்

தெருவிலெனை தாயவளும்
தவிப்புடனே தேடியதை
பொறுப்புடனே சொல்லிட்டு
புளிகரைப்பர் அடிவயிற்றில்.

பொறுமை தனை இழந்து
பொங்கிவரும் கோபமுடன்
வருகையை எதிர்பார்த்து
வாசலிலே இருந்தாலும்

புறவழியே திருடன்போல்
புகுந்தே தெரியாமல்
சோறெடுத்து பசியாற
சீக்கிரமாய் உள்தள்ள

கூரிய செவியதனில்
கேட்டிட்ட சிற்றொலியில்
காரியம் உணர்ந்திட்டு
கையில் தடி மறைத்திட்டு

சிரிப்போடு சளிக்காமல்
சாப்பிட காத்திருந்து
வரிந்திடுவாள் வைதிடுவாள்
விழி நீரை வெளியேற்றி.

வீட்டிலுள்ள பொருள் சிறிது
வீதமாய் சேர்த்தெடுத்து
கூட்டாஞ் சோறாக்கி
கூட்டாளி பசங்களோடு

சுட்டெடுத்த மீனோடு
சூட்டோடு ரசித்து 
கூட்டமாய் களிப்புடன்
கூடி தின்றதுண்டு.

எருமை மாட்டின் மேலேறி
எமதர்ம ராசன்போல்
விரட்டி மணலாற்றில்
விழுந்து புறண்டிட்டு

ஆற்றோர கரையினிலே
அடர்ந்திருக்கும் நாணலதில்
காற்று புக துளை செய்து
கானம் பாட முயன்றதுண்டு.

காவலது மிகுந்திருந்தும்
காய்த்திருக்கும் மாமரத்தில்
கவண்கொண்டு கல்லெறிந்து
கிடப்பவற்றை பொறுக்கி

சவாரி குதிரை போல
சட்டென பறந்து சென்று
லாவகமாய் உடைத்ததனை
பொடி தூவி சென்றதுண்டு.

பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி

தின்பதற்கு தழைபோட்டு
தினம்தோறும் கவனிக்க
கண்டெடுத்த தாயவளும்
காணாமல் செய்ததுண்டு.

பாட புத்தகத்தில்
பக்கத்துக்கு ஒன்றாய்
ஒடித்து மயிலிறகை
ஒப்புறவாய் வைத்திட்டு

குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.

அதிகாலை குளிரினில்
அனல் மூட்டி அமர்ந்திருக்கும்
தாத்தாவின் அருகில் போய் 
தனல் நோகா தொலைவினில்

ஆதரவாய் அரவணைப்பில்
அமர்ந்தவண்ணம் கதையோடு
போதித்த அறிவுறைகள்
பொறுமையாய் கேட்டதுண்டு.

கவலையே இல்லாமல்
கள்ளமில்லா நெஞ்சமுடன்
பவனி வந்த நாட்கள் மீண்டும்
பூவுலகில் கிடைத்திடுமா

சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான் 
நடப்பதற்கு வழியில்லை...

ஞாபகங்களுடன்,

Tuesday, October 25, 2011

அன்புள்ள மகனுக்கு

அன்புள்ள மகனுக்கு
உன் அம்மா எழுதுவது

சந்தை - ல் விற்ற மாடு கூட

வீடு வந்து சேர்ந்து விட்டது
பழகிய பாசத்திற்காக

காணமல் போன நாய் கூட

வந்து விட்டது என்னை தேடி

நான் பெற்ற மகனே


இவரிற்கு உணவு மட்டும் தானடா கொடுத்தேன் ..


உனக்கு என் ரத்தத்தை பாசத்தோடு கொடுதேனடா


நீ எபோது வருவாய்

என்னை கூட்டி செல்ல ...

இப்படிக்கு

முதியோர் இல்லத்திலிருந்து
உன் அம்மா

காலமே பதில் சொல்

காலமே வாழ்க்கையை
தீர்மானிக்கும் திசைகள் ..
இறந்தகலத்தில் நிகழ்ந்தவை
ஞாபகத்தில் இல்லை..
நிகழ்காலத்தில் நடப்பவை
எதுவுமே புரிவதில்லை ...
எதிர்காலத்தில் நடப்பவை
கண்ணில் தெரிவதில்லை ..
நேரம் யாருக்கும்
புரியாத புதிர் ..
வாழ்க்கை என்ற
கடிகாரம் நம்மிடம் .
இதில் சுற்றி கொண்டிருக்கும்
முட்களாக நாம் ...

கொண்டாடித்தான் ஆக வேண்டும் இந்த தீபாவளியை…

வாங்கும் சம்பளம் வறட்சி நிலைக்கும் கீழிருக்க…

வயதாகி போனதினால் தேவைகளும் அதிகரிக்க…


அடிக்கடி பண்டிகைகள் அடங்காமல் அலைக்கழிக்க…


புத்தாடை பட்டாசு வனப்பில் ஊர் மகிழ்ந்திருக்க…


சுற்றுவட்டாரம் சுகங்களில் குதூகலிக்க…




எங்கேயாவது கெஞ்சிக் கூத்தாடி

கடன் வாங்கியாவது கொண்டாடித்தான் ஆக வேண்டும்
இந்த தீபாவளியை…

என் பிள்ளைகளுக்காக…

Saturday, March 19, 2011

அழும் வயிறு..

 
 
அழுக்கு ஆடையும்;
வறட்சிச் சிகையும்;
ஏழ்மைக்கு
உரிமையாளனாய்
ஏழை என்றப் பெயருடன்!

அழும் வயிறுக்கு
ஆதரவாய்
விழிகள் விசும்ப;
குடலில் உலைக் கொதிக்க;
பாதம் இரண்டும்
படுக்கையைத் தேடும்!

எச்சம் கொண்ட
மிச்ச உணவை
வீசுவதற்கு முன்;
வீதியில் பாருங்கள்;
வக்கற்று வயிற்றில்
பசி சுமந்து;
என்னைப்போல
எவருமுண்டா என்று!

Friday, January 28, 2011

வெளிநாட்டு வேலை

 
 
பழைய நினைவுகள்
தூசுப்படிந்துக்;
காசுக்காக தேசம் கடந்துப்;
பள்ளி நண்பர்களும்;
கல்லூரி தோழர்களும்;
அலைவரிசையில்
அலையடிக்கும்;
எப்போதாவது
உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்
குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்
நம் சருமத்திடம்
சரணடைந்து;
பெற்றோரின் விரலுக்கு
நம் காதுச் சமர்ப்பணமாய்;
திருகி விளையாட!

குளியலுக்காக
வாய்க்காலையும்;
வரப்புகளையும்
வலைவீசித் தேடி;
ஓடியப் பாதங்கள்;
ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்
குளிர்சாதனப்பெட்டிற்கு
வெட்கப்பட்டு;
மேனியில்
மறைந்துப்போய்;
வியர்வை என்பதே
மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்
அர்ப்பணமாய்;
உடல்கள் சுற்றும்
நாற்காலிக்கு
மெத்தனமாய்!

உறவுகள்
கடலுக்கு அப்பால்;
மாதா மாதம்
பணம் மட்டும்
பயணம் செல்லும்;

Tuesday, January 11, 2011

என்ன செய்யப் போகிறாய்? !....





மெளனத்தின் வியாபிப்பால்
கனவுகளற்ற எனது பிரபஞ்சம்
சலனமற்றுக் கிடந்தது

தூரத்தில் யாருடைய

வீட்டின் கதவோ
இழுத்துச் சாத்தும் சத்தமும்
கரையும் காக்கையின் சத்தமும்
என்னை....
அரைத் தூக்கத்தில் கிடத்தியது

கூரை வழியே

கசிந்தொழுகும் சூரியன்
தலையணையோரம் தகித்துக்
கன்னங்களைச் சுட்டுக் கொண்டிருந்தது

உச்சி வெயிலின் உஷ்ணம்

பிடரிகளில் வியர்வையாகத் துளிர்த்து
ஊறும் உணர்வாக
வழிந்தோடியதால் - குத்த வைத்து
உட்கார்ந்து கொண்டேன்

எதிர்காலம் சூன்யமாக

ஓர் ஒற்றைக்கேள்வி கேட்டது
என்ன செய்யப் போகிறாய்?.....