அனாதைக் குழந்தையின் பிறந்த நாள் பரிசுகள்
உயிரை வதைக்கும்
தனிமை கண்டு
கண்கலங்குவதேனோ
என்
செல்லப் பெண்ணே?
இந்த உலகம்தானடி
தனிமையில் தவிக்கிறது
உன் உறவின்றி...
உன்னில் -உனக்காக
வாழும் உன் மனம் நான்
நானும் கூட ஒரு
தோழிதான் உனக்கு!
என் கண்மணியே
கண்கலங்காதே!
உனக்காக ஆயிரம்
சொந்தங்கள்
உள்ளதடி
இந்த பூமியில்...
காலையில் உன்
பூ முகம் காண
ஓடி வரும் சூரியன்
உன் தந்தை!
இரவில் உன்னைத்
தாலாட்டி தூங்க வைக்கும்
வெண்ணிலவு
உன் தாய்!
தினமும் உன்
மூச்சுக் காற்றுடன்
கலந்து விளையாடும்
பூங்காற்று - உன்
சகோதரன்!
உன்னைப் பார்த்ததும்
மனம் உருகி
ஓடி வந்து
அணைத்துக் கொள்ளும்
வான் மழை
உன் தோழி!
என்னைவிட அழகா நீ?
என்று எப்போதும்
பொறாமைப் படும்
மலர்கள் உன்
சகோதரிகள்!
இத்தனை இருந்தும்
ஏன் நீ இன்னும்
கண்கலங்குகிறாய்?
இவை அனைத்தும்
கடவுள் உனக்காக -
நீ
பிறந்த அந்த நாள்முதலே
கொடுத்த பரிசுப்
பொருட்கள் கண்ணே!
No comments:
Post a Comment