Monday, September 13, 2010

வெளிநாடு போனேன்

 

 

பெரிய துண்டாக வாங்கி
தன் உடம்பை மறைத்துக்கொள்ள
ஆசைப்பட்ட அப்பாவிற்கு
சட்டை துணிகளும்........

வேறு வழியின்றி

பற்றாக்குறைக்கு
எனக்காக
தாலியை விற்று
பணம் கொடுத்தனுப்பிய அம்மாவிற்கு
நகைகளும்
வாங்கிக்கொண்டு
நான்கு வருடம் கழித்து
வந்து சேர்ந்தேன்
வெளிநாட்டிலிருந்து........

என் வீடிருக்கும் வீதியின்

முனையில் குடியிருக்கும்
பொன்னம்மாள் கிழவி
என்னை நலம் விசாரித்துவிட்டு
வாய்பொத்தி சொன்னாள்
மறக்காம
உன் அப்பன் ஆத்தா
போட்டோவுக்கு
மாலை வாங்கிட்டு போயி
சாமி கும்பிடு............

கதறி அழுதவனை

கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தான்
பூக்கடைக்காரன்......!!!

No comments:

Post a Comment