சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???
சிந்திய சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் புறாக்கள் வீட்டின் முன்
வருவதே இல்லை!
இலையுதிர் காலங்கள்
என்பது செய்தியாய்
கேட்டால்தான் தெரிகிறது!
மாலையை நினைவுப் படுத்தும்
மல்லிகை எல்லாம்
மாற்றான் தோட்டத்திலும் இல்லை!
அந்த ஜன்னல் ஓர
சாரல்களை எல்லாம்
கண்ணாடி போட்டு மூடிவிட்டனர்!
இப்பொழுதெல்லாம் செல்லப் பிராணிகள்
பிளாஸ்டிக் பொம்மைகள்
என்றாகிவிட்டது!
மரத்தடி சாமிகள் கூட
சாலையின் ஓரமாய்
நகர்ந்துவிட்டனர்!
குழந்தைகள் எல்லாம்
திடலுக்கு பதில்
வீடியோ கேமில் அமர்ந்துவிட்டனர்!
விறகு அடுப்பு ஊதியவர்கள் கூட
பஞ்சு வைத்து புகைக்க
ஆரம்பித்து விட்டனர்!
கொக்குகளும் நாரைகளும்
வட்டமிட ஆழ்குழாய்
கிணறுகளையாவது தேடுகின்றன!
அரிசி கோலங்கள்
சுண்ணாம்பாகி சாயப் பூச்சாகி
கட்டெறும்புகளாகிவிட்டன!
என்ன செய்வது
இந்த தின மழையில்
முளைக்கும் அபூர்வ காளான்களை!
இதைத்தானே செய்தீர்கள்???
இந்த தீபாவளியையாவது விட்டுப்போன
சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???
No comments:
Post a Comment